நாலடியார் சுற்றம் தழால்
நாலடியார் 21. சுற்றம் தழால் பாடல் 201 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். கருவுற்றதனால் அதுபற்றி வரும் கணக்கற்ற நோவும் மசக்கையும் குழந்தை பெறுங்காலத்தய நோவும் கண்ணால் தம்மடியில் குழந்தையைக் கண்ட தாய் மறப்பதுபோல் தாம் கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம் கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும். பாடல் 202 அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். வெப்பம் மிகு கோடையில் வந்தடைந்தோருக்கெல்லாம் நிழல்தரும் மரம்போல் தம்மை நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம் தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து தான் வருந்தி உழைத்து பழுத்தமரம் போல் பலரும் பயன்நுகர வாழ்வதே நல்ல ஆண்மகனின் கடமையாம். பாடல் 203 அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னார்பெரியோர் ; – அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்ப...