முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டு- முல்லைப்பாட்டு -நப்பூதனார்
முன்னுரை
பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் முல்லைப்பாட்டு:
கார்காலத்தில் மழைபொழியும் மாலை நேரம்:
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, (1 - 6)
காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வீசும் பிடவம்பூச் செடிகள் களையப்பட்டு, வேடருடைய அரண்கள்அழிக்கப்பட்டு, வேட்டையாடும் விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமாக பாசறை வீடு உருவாக்கப்பட்டது. அது பாடி வீடு என்று அழைக்கப்படும். அவ்வீட்டில் தலைவன் தங்கியிருந்தான்
பெருமுதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறுவீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப (7 - 11)
எவரும் அணுக முடியாத அரிய காவலையுடைய பழைய ஊரின் பக்கத்தில் சென்று, யாழிசை போல் வண்டுகள் ஆரவாரிக்க அரும்புகள் மலர்ந்திருக்கும் நறுமணம் மிக்க முல்லை மலரையும், படியில் கொண்டு சென்ற நெல்லையும் தூவி, இறைவனை வேண்டிக் கையால் தொழுது நற்சொல் கேட்டு நின்றனர். அப்பொழுது,
ஆயர்குல மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்:
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப, (12 - 23)
வளைந்த கோலினைக் கையிலே வைத்துள்ள கோவலர் பின்னே நின்று செலுத்த, உன்னுடைய தாய் இப்பொழுதே வருவர்” என்று கூறிய நன்மை தரும் நல்ல சொல்லைக் கேட்டோம். நல்லவர்களின் நல்ல வாய்ச் சொல்லைக் கேட்டதனால், பகைவர் இடத்தையெல்லாம் கவர்ந்து, போரை முடித்துத் தலைவன் வருவான். இது உண்மை. நீ உன்னுடைய துன்பத்தால் எழுந்த வருத்தத்தினைக் களைவாயாக! மாந்தளிரின் நிறத்தினை உடையவளே!” என்று தலைவியிடம் பெருமுது பெண்டிர் பலமுறை வற்புறுத்திக் கூறவும், தலைவி அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல், தன் மலர் போன்ற கண்களிலிருந்து முத்துப்போல் தனித்து வீழ்கின்ற நீர்த்துளிகள் ஒழுக, வருத்தத்தில் இருந்தாள்.
வீரர்கள் பாசறை அமைத்தல்:
கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி,
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி, காட்ட
இடுமுட் புரிசை ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (24 - 28)
பசுமையான புதர்களையும் வெட்டி, வேட்டுவரின் சிறு வாயில் அமைந்த அரண்களையும் அழித்து, காவலுக்காகக் காட்டிலுள்ள முள்ளால் மதிலை வளைத்துக் கட்டிய இடத்தில், ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் பரந்த பாசறையை வீரர்கள் அமைத்தன
முற்றத்தில் நிற்கும் யானையின் நிலை:
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு, கதிர்மிடைந்து யாத்த,
வயல்விளை, இன்குளகு உண்ணாது, நுதல்துடைத்து,
அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென,
கவைமுட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம் கைப்ப (29 - 36)
ஒழுங்காக அமைந்துள்ள தெருவில், நாற்சந்தி கூடுமிடத்தில் உள்ள முற்றத்தில் காவலுக்காக நின்ற, மதநீர் ஒழுகும் கன்னங்களும், சிறிய கண்களும் கொண்ட யானை, உயர்ந்து வளர்ந்த கரும்போடு நெருங்கக் கட்டிய நெற்கதிர்களையும், வயலில் விளைந்த இனிய அதிமதுரத் தழைகளையும் உண்ணாது அவற்றைத் தனது நெற்றியில் துடைத்து, கூரிய முனையையுடைய கொம்பின் மேலேற்றி, தும்பிக்கையில் அடக்கிக் கொண்டிருந்தது. யானையைப் பயிற்றும் மொழியைத் தவிர வேறெதுவும் கற்காத பாகர், வடமொழியில் யானையிடம் பேசிக் கவளத்தைத் தின்னுமாறு யானைக்கு ஊட்டினர்.
பாசறையில் அரண்கள்:
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகுநிரைத்து,
வாங்குவில் அரணம் அரணம் ஆக, (37 - 42)
தம் காவி நிறம் தோய்ந்த ஆடையை, முக்கோலை நட்டு அதன்மேல் தொங்கவிட்டிருப்பது போல, வீரர்கள் தாம் செய்கின்ற நல்ல போரில் புறமுதுகிட்டு ஓடாமல் இருப்பதற்குக் காரணமான வலிய வில்லை ஊன்றி அதன் மேல் அம்புக்கூட்டை தொங்கவிட்டனர். கூடாரம் அமைப்பதற்காக வில்லை ஊன்றி கயிற்றால் வளைத்துக் கட்டிய இருப்பிடத்தில், பூ வேலைப்பாடமைந்த கைவேலைக் குத்தி கேடயங்கள வரிசையாக வைத்து, வீரர்கள் தங்குவதற்காக வில்லாலாகிய பல்வேறு அரண்களை அமைத்தனர்.
பாசறையின் நடுவில் மன்னனுக்கு ஒரு தனியிடம்:
வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்,
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு (43 - 44)
நீண்ட கோல்களோடு கூடிய பல நிறம் வாய்ந்த திரைகளால் கூறுபடுத்தி, வேறோர் தனி இடம் மன்னனுக்கென்று அமைத்தனர்.
பாசறையில் விளக்கேற்றும் மங்கையர்:
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து,
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, (45 - 49)
கூந்தல் புரளும் அழகிய சிறு முதுகுப்புறத்தையும் உடைய பெண்கள் இரவைப் பகலாக்கும் வலிய பிடி அமைந்த ஒளி வீசும் வாளினைப் பல்வேறு நிறமமைந்த கச்சில் சேர்த்து கட்டியிருந்தனர். பாவையின் கையிலே இருக்கின்ற விளக்கில் நெய் குறையுந் தொறும், நெய் வார்க்கும் குழாயினைக் கொண்டு நெய் வார்த்து, நெடுந்திரியினைக் கொளுத்தினர்
பாசறையில் மெய்காப்பாளர்:
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்,
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்
பெருமூ தாளர் ஏமம் சூழ (50 - 54)
உடம்பினைப் போர்த்தியுள்ள வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர், தூக்க மயக்கத்தில் தளர்ந்த நடையோடு திறமையாகப் பாதுகாவலைச் செய்தனர்.
நாழிகைக் கணக்கர்:
பொழுதுஅளந்து அறியும், பொய்யா மாக்கள்,
தொழுதுகாண் கையர், தோன்ற வாழ்த்தி,
‘எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்; நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து’ என்று இசைப்ப (55 - 58)
பொய் கூறாமல் (சரியாக), நேரத்தைக் கணக்கிட்டு, இவ்வளவு என்று கூறும் நாழிகைக் கணக்கர் மன்னனைக் கண்டு தொழுது, அவன் புகழ் தோன்றுமாறு வாழ்த்தி, ”அலைகடல் சூழ்ந்த உலகத்தில் பகைவரை வெல்லுவதற்குச் செல்பவனே! உனது நாழிகை வட்டிலில் (நேரத்தை அளந்தறியும் கருவி ) சென்றுள்ள நேரம் இவ்வளவு” என்று அறிவித்தனர்.
மன்னன் இருக்கும் இடத்தில் யவனர்:
மத்திகை வளைஇய, மறிந்துவீங்கு செறிவுஉடை,
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்,
திருமணி விளக்கம் காட்டி, .............. (59 - 63)
குதிரைச் சவுக்கினை மடக்கி வளைத்துக் கட்டியதால் புடைத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டிய ஆடையும், சட்டையும் அணிந்த, அச்சம் தரும் தோற்றமும் வலிமையான உடம்பும் வீரமும் உடைய யவனர், புலிச்சங்கிலி தொங்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெருமை பொருந்திய (மன்னன் இருக்கும்) நல்ல இல்லத்தில் அழகிய மணி விளக்கினை ஒளிரச் செய்தனர்.
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சர்:
......................................................திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின்,
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக, (63 - 66)
வலிய கயிற்றால் வளைத்துக் கட்டப்பட்ட திரைச்சீலைகள் அமைந்த இரண்டு அறைகளைக் கொண்ட மன்னனின் பள்ளியறையில், (ஓரறையில்) செய்திகளை உடலசைவால் தெரிவிக்கும் நாவால் உரைக்கமுடியாத சட்டையணிந்த மிலேச்சர்கள் அருகாமையில் இருப்பர்.
பாசறையில் உறக்கமில்லாத மன்னனின் மனநிலை:
மண்டுஅமர் நசையொடு கண்படை பெறாஅது,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய,
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல்துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து,
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்;
ஒருகை பள்ளி ஒற்றி, ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து…... ( 67 - 76)
போர் செய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டதால், பள்ளியறையில் தூக்கம் கொள்ளாது (முதல் நாள் நடைபெற்ற போர்க்களக் காட்சிகளை நினைத்தபடியே) மன்னன் படுத்திருந்தான். பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்ததால் புண்பட்டு, பெண் யானைகளை மறந்திருக்கின்ற ஆண்யானைகளை நினைந்தும், அடிபட்ட பாம்பு துடிப்பதைப் போல் துடித்து விழும்படி, யானைகளின் பருத்த துதிக்களை வெட்டி வீழ்த்தி, தாம் அணிந்திருந்த தேன் ஒழுகும் வஞ்சிமாலைக்கு வெற்றியைத் தந்து, செஞ்சோற்றுக் கடன் தீர்த்துப் போர்க்களத்திலே இறந்த படைவீரர்களை நினைந்தும், தோலாலான கவசத்தை அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து, உணவு உண்ணாது வருந்தும் குதிரைகளை நினைந்தும், ஒரு கையினைப் படுக்கையின் மேல் ஊன்றி, கடகம் அணிந்த மற்றொரு கையினால் தலையைத் தாங்கி, மன்னன் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
வெற்றிக்குப் பிறகு:
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல்,
நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி,
அரசுஇருந்த பனிக்கும் முரசுமுழங்கு பாசறை
இன்துயில் வதியுநன்.................... (77 - 80)
பகைவரைக் குறித்துப் படைக்கலங்களைச் செலுத்திய தனது வலிமையான விரலாலே பகைவரை வென்று, தான் சூடிய வஞ்சி மாலைக்கு வெற்றியை நிலைபெறச் செய்து மறுநாள் போரில் வெற்றி பெற்றதால் மனநிறைவு பெற்று, பகையரசர் கேட்டு நடுங்கும்படி வெற்றி முரசு முழங்க, மன்னன் பாசறையில் இனிமையாகத் துயில் கொண்டான்.
தலைவனைக் காணாது வருந்தும் தலைவி:
……………………….. காணாள் துயருழந்து
நெஞ்சுஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு,
நீடுநினைந்து, தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழைநெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர்அழல
இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து,
முடங்குஇறைச் சொரிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழ்இசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின .... .... .... .... (80 - 89)
தலைவன் வரக்காணாது துயருற்று வருந்திய தலைவியை, அவள் நெஞ்சம், ‘ஆற்றியிரு’ என்று சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், தலைவியோ துயரத்தை மறைக்க முடியாது, வருத்தத்தில் இருந்தாள். நீண்ட நேரம் சிந்தித்தாள். பின் தன்னைத் தேற்றிக் கொண்டாள்; கழன்று விழுகின்ற வளையல்களைத் திருத்தமுற, கழறாமல் அணிந்து கொண்டாள்; அறிவு மயங்கியும், அவ் அறிவு மயக்கத்தால் பெருமூச்செறிந்தும், அம்பு தைத்த மயில் போல் நடுங்கினாள். அவளின் அணிகலன்கள் நெகிழ்ந்தன. பாவை விளக்கின் பெரிய சுடர் எரிய, அகன்று சிறந்து உயர்ந்து விளங்கும் ஏழு அடுக்கான அழகிய வீட்டில், கூரை கூடும் இடங்களில் மழைநீர் அருவி போலச் சொரிந்து. அதனால் ஏற்பட்ட இனிய பலவாகிய முழக்கத்தினைக் கேட்டவாறே தலைவி படுத்துக் கிடக்கின்றாள். அத்தலைவியின் காதுகள் நிறையுமாறு ஆரவாரித்தன.
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பிவருதல்:
……………………………………….. வென்று, பிறர்
வேண்டுபுலம் கவர்ந்த, ஈண்டுபெருந் தானையொடு
விசயம், வெல்கொடி உயரி, வலன்ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப .... .... ....(89 - 92)
பகைவரை வென்று அவர்கள் விரும்புகின்ற நிலங்களைக் கவர்ந்து, பெரிய படையோடு வெற்றிக் கொடியை உயர்த்தியபடி, வெற்றியை அறிவிக்கும் வகையில், ஊது கொம்பும், சங்கும் முழங்கத் தலைவன் திரும்புகின்றான்.
கார்காலதில் செழித்திருக்கும் முல்லைநிலம்:
.................................................அயிர
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,
முறிஇணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரிமருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில், (92 - 100)
முல்லைநிலத்து நுண்ணிய மணலில், நெருங்கிய இலைகளைக் கொண்ட காயா மலர், மை போல் மலர்ந்திருக்கவும், தளிரையும் பூங்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன் போன்ற மலர்களைச் சொரியவும், காந்தளின் குவிந்த மொட்டுகள் அழகிய கை போல பூத்திருக்கவும், காடு செழித்திருக்கும் முல்லை நிலத்தின் பெரிய வழியிலே, வானம் தப்பாமல் பெய்த மழையின் காரணமாக விளைந்த, வளைந்த கதிரினையுடைய வரகினூடே, முறுக்கிய கொம்புகளைகயுடைய ஆண்மானுடன் பெண்மான் துள்ளிக் குதித்து விளையாடுகின்ற முல்லைநிலத்து, எதிர்த்திசையிலிருந்து வெண்ணிறமான மழை பொழிகின்ற கார் காலத்தில் (ஆவணி மாதத்தில்) ...............
காட்டைக் கடந்து விரைந்து வரும் மன்னனின் தேர்:
முதிர்காய் வள்ளியம் காடு பிறக்குஒழிய,
துனைபரி துரக்கும் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101 - 103)
போர் வினையை நன்கு ஆற்றிய தலைவன், முதிர்ந்த காயினையுடைய வள்ளிக்கொடி படர்ந்த காடு, பின்னோக்கிச் சென்று மறைய, விரைந்து செல்லும் தேரினை விரைவாகச் செலுத்தினான். நெடுந்தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரைகள் (ஆரவாரித்தன).
Comments
Post a Comment