பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்

 பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.


பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

  

    நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்

    நடுவன் வரும்பொழுது நாடி வருமோ

    கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ

    கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே (40)

  

    நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அனைத்தையும் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர்



நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல்

நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே

பாரிற் பல உயிர்களைப் படைத்த வந்தனைப்

பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே (64)


நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நில்லாமல் நீங்கும் உலகில் உயிர்களைப் படைத்த இறைவனைப் பற்றி ஆடு பாம்பே என உடலழிவைப் பற்றி பாடுகிறார்


பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்துடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறத்தில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.



ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்

அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்

நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி

என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.


தெய்வம் ஒன்றுதான் உன் தெய்வம் என் தெய்வம் என்று தனியாக இல்லை இறைவன் சிவமே ஏகனாகவும் அநேகனாகவும் இருக்கிறார். இதையே மணிவாசகபெருமான் "ஏகன் அநேகன்" என்று தன்னுடைய திருவாசகத்திலே குறிப்பிடுகிறார் . நிலையில்லாத செல்வத்தை நம்பாமல் நிலையான செல்வமாகிய சிவனடியை போற்றுங்கள் . 




நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம் பொம்மல்

ஆட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்த சந்தைக்

கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்

ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்கு உபதேசமிதே !


பிற உயிர்களை அன்பு செய்யுங்கள் பசித்தவர்களுக்கு அன்னம் கொடுங்கள் அதுவே நல்ல அறம் . சத்குருவான சிவத்தை மட்டுமே நம்புங்கள் அவர் பாதத்தை மட்டுமே நம்பி இருங்கள் .இந்த உடலும் நம்முடன் இருக்கும் சொந்தம் அனைத்துமே அடர்ந்த சந்தைக்கூட்டம் . சந்தை கூடும்போது எவ்வளவு கூட்டம் இருக்குமோ அந்த சந்தை முடிந்தவுடன் கூட்டம் கலைந்து விடுகிறது அதே போல மண்ணுக்குள் புதைத்த உடலானது கலைந்து உருக்குலைந்து விடுகின்றது அது போல நமது சுற்றமும் அவர்கள் வேலை முடிந்தவுடன் கலைந்து சென்று விடுவார்கள். மனமே உனக்கு இதுதான் உபதேசம் என்று அவர் மனத்திடம் சொல்வதுபோல நமக்கும் சொல்கிறார் .



பிறக்கும்பொழுது கொண்டுவருவதில்லை பிறந்தமண்மேல்

இறக்கும்பொழுது கொண்டுபோவதில்லை இடைநடுவில்

குறிக்கும்இச் செல்வம் சிவந்தந்த தென்று கொடுக்கறியாது

இறக்குங் குலமருக்கென் சொல்வேன்கச்சி ஏகம்பனே.

                                                                                                                      - 


இந்த மண் மீது பிறந்து வரும்போது நாம் எதுவும் வருவதில்லை அதே போல இறந்து போகும்போதும் எடுத்து போவதில்லை இடையில் வரும் செல்வத்தை சிவன் தந்ததென்று பிறருக்கு கொடுத்து உதவாமல் நமதென்று இருந்து கடைசியில் எந்த பயனும் இல்லாமல் 

இறந்து போகிறவர்களுக்கு நான் என்ன சொல்லமுடியும் .பிறப்பதும் நிர்வாணம் இறப்பதும் நிர்வாணம் , உடலெடுத்து வந்த நாம் அந்த உடலையும் எடுத்துப் போக முடியாது .நிலையான சிவ பதத்தைத் தேடுவோம் நம்மால் இயன்ற வரை உதவி செய்வோம் .        




அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு

கைத்தலை மேல்வைத் தழும் மைந்தரும் சுடு காடு மட்டே!

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

                                                                                       



நாம் வாழ்ந்த வாழ்க்கையும் தேடிய செல்வமும் வீட்டோடு இருந்து விடும் நம் சுக துக்கத்தில் பங்கு கொண்ட மனைவியும் வீதியோடு நின்று விடுவாள் . நாம் பெற்ற மைந்தரும் தலையிலடித்து அழுது கொண்டு சுடுகாட்டுக்கு வந்து ஈமக்கடனை முடிக்கும் வரைதான் , முடிவில் நம்முடன் வருவார் யார் ? நாமும் யாருடனும் செல்ல முடியாது நம்முடன் யாரையும் அழைத்துச் செல்ல முடியாது , நாம் செய்த நன்மை தீமை என்ற இருவினையும் தாம் நம்மைத் தொடர்ந்து வரும் அதனால் புண்ணியம் இல்லாமல் போனாலும் பாவம் செய்யாமல் இருப்போம் .





Comments

Popular posts from this blog

நாலடியார் சுற்றம் தழால்

நாச்சியார் திருமொழி