தேம்பாவணி
தேம்பாவணி - பெயர்க்காரணம் :
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்..
தேம்பாவணியின் அமைப்பு:
தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப்பெற்றது தேம்பாவணி.
வளன் சனித்த படலம்
தாவீது மன்னன் மரபில் காப்பியத் தலைவனாகிய வளன் எனப்படும்
சூசை பிறந்த செய்தியைக் கூறும் பகுதி.
1.தாவீது மன்னனின் பெருமை
அன்ன மா திரு நகர் அகத்து, உடற்கு உயிர்
என்ன, மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து,
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர்
சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ.
பெருமை வாய்ந்த எருசலேம் திரு நகரத்தில், உடலுக்கு உயிர் போல, பெருமை வாய்ந்த தாவிதன் இன்பமாக அரசு வீற்றிருந்து,
பகைவர் அச்சங்கொள்ள, பாவலர் புகழ்ந்து சொன்ன பாடலின் நிகருக்கும்
மேலாக விளங்கினான்.
2. தாவீதின் அருள் தன்மை :
அருளொடு வீங்கிய அகத்தினான்; துளி
மருளொடு வீங்கிய மழைக் கையான்; மலர்ச்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான்;
பொருளொடு வீங்கிய பொறைப் புயத்தினான்.
அவன் உயிர்களிடத்துக் கருணையால் நிறைந்த நெஞ்சம் படைத்தவன்; துளிகளின் மிகுதியால் நிறைந்த மழைபோல் கொடுக்கும் கையை உடையவன்; மலர்ச் சுருள்களால் நிரம்பக் கட்டிய மாலை அணிந்த மார்பு கொண்டவன்;
பொன் அணிகலன்களால் நிறைத்து மலை போல் திரண்ட புயங்களை உடையவன்.
3. தாவீதின் வீரம் :
ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான்;
அளி தவழ் நிழல் செயும் அருட் குடையினான்;
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான்;
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான்
அவன் மின்னலின் ஒளி தவழும் இடியையே அம்பாகப் பொழிந்த
வில்லை உடையவன்; கருணை தவழும் நிழலைக் குடிகளுக்கு வழங்கும்
அருள் என்னும் குடையை உடையவன்; வெளிச்சம் தவழும் ஒன்பது வகை
மணிகளையும் விழுங்கும் தன்மையாய்ப் பதித்த தேரை உடையவன்; களிப்பு
தவழ்வதனால் மதம் பொழியும் ஆண் யானை போன்ற வீரம் படைத்தவன்.
4. வெற்றிச் சிறப்பு :
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா,
மெய் முனர் பொய் எனா வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலா கலங்கிப் போற்றும், போர்
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான்.
போர் முகத்தில் பின்னிடுதல் இல்லாத வலிமை கொண்டு ஆண்சிங்கம் போல்
தோன்றி,உண்மையின்முன்பொய்நிலை
கொள்ளாமைபோல் அஞ்சும் பகைவர் இவன்
கை வன்மைக்கு முன் நிற்க
இயலாது கலங்கித் துதிக்கும் வகையில் போர் செய்வதற்கு முன்னரே
வெற்றிகொள்ளும் சிங்கம் தீட்டிய வெற்றிக் கொடியை உடையவன்.
5. வானவர் போற்றும் தன்மையன்:
வேல் செயும் போரினால் வெலப்படான்; தனைச்
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்;
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று, ஒளி
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான்.
அவன் வேல்கொண்டு செய்யும் போரினால் எவராலும் வெல்லப்படாதவன்; மிகுதியாகச் செய்யும் தவத்தினால் தன்னையே வென்ற தன்மைஉடையவன்; மீன்களைக் கொண்ட கடலால் சூழப்பட்ட மண்ணுலகில் தான் இருப்பினும், மேலே ஒளியைப் பொழியும் வானவரும் விரும்பத்தக்க தன்மை உடையவன்.
6. மாட்சிமை பொருந்தியவன் :
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீண் தவம்,
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர்
கோது இல் நன் உதவி செய் கொழு கொம்பு ஆகி,
வான்
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான்.
நல்ல நீதி முறையெல்லாம் தன்னுள் நிறைந்த நீண்ட தவமும்,
ஆதிக் கடவுளின் வேதமும் ஆகிய இவை அனைத்தும் மேலே
படர்வதற்குக் குற்றமில்லாத நல்ல உதவியைச் செய்யும் கொழு
கொம்புதானே ஆகி, வானகத்திற்கு உரிய குறையற்ற நன்முறைகளெல்லாம்
இவ்வுலகில் அடைந்து கொண்ட மாட்சிமை உடையவன்.
.
7. நீதி நெறி வழுவாதவன் :
கோல் நலம் கோடு இலா நிறுவிக் கூர்த்தலால்,
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து, நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே.
செங்கோலின் நலம் வழுவாத முறையில் நிறுவிச் சிறத்தலால்,
நூலால் ஆகும் கல்வி நலமும் செல்வத்தின் நலமும் அறத்தின்
நுண்மையான நலமும் தேன் போன்ற இன்ப நலமும் இனிது நிறைந்து,
விண்மீன்களின் நலம் நிறைந்த வானுலகமும் வியக்குமாறு நாடெல்லாம் போற்ற வாழ்ந்தான்.
8. பகைவரை அழிப்பவன் :
பகை செய்வார்க்கு இடி என, படிந்து போற்றிய
தகை செய்வார்க்கு அமுது என நாமத் தன்மையான்,
நகை செய்வார்க்கு, இளவலாய், நடத்தும் வேல் இலான்,
மிகை செய்வான்; ஆண்மையை விளம்பல நன்று அரோ
தன்னோடு பகை கொள்பவருக்கு இடி போலவும், தன் கால்களில்
விழுந்து துதித்து மேன்மை செய்பவருக்கு அமுது போலவும் அச்சந்தரும்
தன்மை உடையவன் அத்தாவிதன் அவன் சிறுவனாய் இருந்த காலத்தில்
தன்னை இகழ முற்படுவார்க்குத் தன் கையில் போர் நடத்துவதற்கு உரிய
வேலும் இல்லாதவனாய்த் துன்பம் செய்தவன்; இத்தகையவனின் வீரத்தை
எடுத்துக் கூறுதல் நன்றாம்.
9. சவுல் அரசனைப் பீலித்தேயர் எதிர்த்தல் :
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால், மறை பகைத்தனர், முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு எனச் சர மழை வழங்கி,
பொறை வழங்கிய பிலித்தையர், போர் செய எதிர்த்தார்.
மெய் வேதம் வழங்கிய வளம் கொண்ட சூதேய நாட்டில் சவூல் என்ற
மன்னன் ஆண்ட முறை நடந்த போது, மலைகளில் சஞ்சரித்த பிலித்தையர்
அவ்வேதத்தைப் பகைத்தவராய், மேகம் நின்று மழை பொழிந்ததற்கு ஒப்பாக
அம்பு மழை பொழிந்து, போர் செய்யுமாறு எதிர்த்து வந்தனர்.
10. பீலித்தேயருள் இராக்கதன் :
வேலியால் கது விடாத் திரு நகர் எலாம் நடுங்க,
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்,
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான்.
மதிலின் சிறப்பால் பகைவர் நுழைய விடாத எருசலேம் திருநகர்
முழுவதும் நடுங்குமாறு, சூரிய ஒளியால் கதிர் பரப்பிய வாளை ஏந்தி
நின்ற பிலித்தையர் நடுவே, உள்ளே கொண்ட மழை நீரினால் கருநிறம்
பெற்றுப் பெருத்த மேகத்தைப் போன்ற உருவத்தைக் கொண்டு தோன்றிய கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான். கோலியாற்று என்னும் கொடிய ஓர் அரக்கனும் எதிர்த்து நின்றான்.
Comments
Post a Comment