நன்னெறி
சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி
நன்னெறி.
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்)
தமிழில் தோன்றிய அறநூல்களில் நன்னெறியும் ஒன்று. மக்களை நல்வழிப்படுத்தும் நல்ல அறநெறிகளைக் கூறுவதால் இந்நூல் நன்னெறி எனப்படுகிறது. இந்நூலைச் சிவப்பிரகாசர் இயற்றியுள்ளார். இவரைத் துறை மங்கலம் சிவப்பிரகாசர் என்றும் சிவப்பிரகாச சுவாமிகள் என்றும் அழைப்பர். துறைமங்கலத்தில் நெடுநாள் தங்கியிருந்ததால் அப்பெயரையும் சிவப்பிரகாசரின் பெயருடன் சேர்த்து அழைக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இறை அடியவராகவே வாழ்ந்ததால் சிவப்பிரகாசரைச் சுவாமிகள் என்றும் அழைக்கின்றனர். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த சிவப்பிரகாசர் முப்பது நூல்கள் படைத்துள்ளார். இந்தப் பாடத்தில் அவர் இயற்றிய நன்னெறியில் இடம்பெற்றுள்ள அறக் கருத்துகளை மட்டும் பார்ப்போம்.
இந்நூலில் உள்ள பாடல்களைச் சிவப்பிரகாசர் முதலில் கடற்கரையில் உள்ள மணலில் எழுதினார். பின்னர் அவருடைய மாணவர்கள் அவற்றைப் படிக்க எழுதினார்கள் என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் 'மகடூஉ முன்னிலை'யாக அதாவது ஒரு பெண்ணை அழைத்துக் கூறுவது போல அமைந்துள்ளது.
பெயர்க்காரணம் :
நன்மைகளைத் தரும் ஒழுக்க நெறிகளை கூறும் நூல். ஆகவே நன்மை+நெறி=நன்னெறி என வழங்கப்படுகிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து மட்டும் 2 அடி, மற்றவை நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாக்களால் ஆனது. முதல் இரண்டடியில் ஆசிரியர் சொல்ல வந்த கருத்து, அடுத்த இரண்டடிகளில் அதனை விளக்கி உவமையும் கூறப்பட்டுள்ளது.
1.உபசாரம் கருதாமல் உதவுக
என்றும் முகமன் இயம்பாதவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?
பொருள் விளக்கம்:-
அழகான பூ அணிந்த மணமான கூந்தல் உடையவளே, தினந்தோறும் உணவின் சுவை அறியாத கை உணவை எடுத்து நாவிற்கு கொடுப்பது புகழுக்காகவா !! அது போல் நமக்கு அறிமுகம் ஆகாமல், நன்கு முகம் கூறாதவருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் உதவுவார்கள்.
2. கணவன்-மனைவி அறம் செய்யும் முறை :
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
பொருள் விளக்கம்:-
பதினாறு கலைகள் நிரம்பிய முழு மதி போல் முகத்தை உடையவளே, ஒரு விஷயத்தை இரண்டு கண்களும் தான் நோக்குகின்றது, ஆனால் பார்வை ஒன்று தான். அது போல் கணவனும், அன்பு மனைவியும் இரண்டு நபர்கள் ஆனாலும் சிந்தனையில், செயலில் ஒத்துழைத்தால் சிறந்த பலன்கள் பெறுவார்கள்.
3. சினம் கொள்ளக்கூடாது
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெல்லம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
பொருள் விளக்கம்:-
நீரின் அளவு பெருகி இருக்கும் போது அணையை காப்பதற்கு அவசரப்பட்டு உடைத்து சேதத்தை விளைவிப்பதை விட, நீரை கால்வாய் வழியே மென்மையாக அணைக்கப்படுவதே சிறந்தது. அதைப் போல் மனம் கொதித்து கோபம் வந்தால் போதும் அதை அடக்கி ஆளுவதே சிறந்த குணம். அதுவே சிறந்த மனிதனின் குணமென்க.
4.தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.
பொருள் விளக்கம்:-
சிறந்த மனிதர்கள் வறுமை உற்ற காலத்திலும் அவர்களை விட வறுமையில் இருப்பவரை கண்டால், தங்களுக்கு இருக்கும் பொருளையும் கொடுத்து உதவுவார்கள். நிலவு தன் பின்புறம் இருட்டு இருந்தாலும் அதை நீக்காமல் , இருளாக இருக்கும் இந்த உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்து உதவுவதை போல்.
5.உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெரியவராவார்:
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு.
பொருள் விளக்கம்:-
பூமியில் விழும் சூரியனின் ஒளியை வைத்து சூரியன் வெளிச்சமும், வெப்பமும் தான் என்று எடை போட முடியாது. அதுபோல் ஒருவரின் உருவத்தையும், எளிமையையும் வைத்து அவர் படித்த கல்வியின் கடலை எடைபோட முடியாது. உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக் கூடாது.
Comments
Post a Comment