பாரதியார் கவிதை – செந்தமிழ் நாடெனும் போதினிலே

 பாரதியார் கவிதை – செந்தமிழ் நாடெனும் போதினிலே


 செந்தமிழ் பொருள் :


சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும் உரைநடைத் தமிழையும் செந்தமிழ் எனலாம். செந்தமிழ் வட்டார மொழி வழக்குகளைத் தாண்டி அனைத்து தமிழர்களும் தமிழ் மொழியைப் பேச எழுத உதவுகிறது.


செந்தமிழ் நாடு- பாடல்




செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத்தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ?



செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே


 மேலும் தமிழ்நாடு என்னுடைய மூதாதையரின் நாடு என்று எண்ணும்போது மனம் கொள்ளும் பெருமிதத்தால் புதிய சக்தி பிறக்கிறது என்று பெருமிதத்துடன் பாடுகின்றார்

பாரதியார்.



 வேதம் நிறைந்த நாடு


 அறிவை வளர்க்கும் நூல்கள் பல தோன்றிய நாடு.உலகில் இணையில்லா வீர உணர்வு உடைய மக்கள் நிறைந்த நாடு தேவலோக மங்கையர் போன்ற அழகிய பண்புடைய இளம்பெண்கள் நிறைந்த நாடு நம் தமிழ் நாடு என்று போற்றுகின்றார்.


வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல

காதல் புரியும் ஆரம்பையர் போல் – இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு




இயற்கை வளம்


மலைவளம், கடல்வளம் போன்ற இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு. இயற்கையாக அமைந்த ஆறுகள் பல இங்கு உள்ளன. காவிரி ஆறு, தென் பெண்ணை ஆறு, பாலாறு, வைகை முதலிய பல பெரிய ஆறுகள் தமிழ் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் வளத்தைக் குறிப்பிடும்போது பாரதியார்,



காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி – என

மேவிய யாறு பலவோடத் – திரு

மேனி செழித்த தமிழ்நாடு




இத்தகைய நீர்வளம் பொருந்திய தமிழ்நாட்டில், பிற செல்வங்கள் எல்லாம் செழித்திருந்தன என்று கூறுகிறார்.


செல்வம் நிறைந்த தமிழ்நாடு



 அகத்தியர் தமிழ் மொழியை சிவ பெருமானிடம் கற்றார். தாம் கற்ற தமிழ்மொழியை தொல்காப்பியர் முதலான சீடர்களுக்கு கற்பித்த முனிவரான அகத்தியர் வாழ்ந்த பொதிகை எனும் பெரிய மலையை உடையது தமிழ்நாடு. இவ்வுலகத்தில் அரிய செல்வங்கள் எத்தனை உண்டோ அத்தனை செல்வங்களையும் பெற்று திகழ்வது தமிழ்நாடு



முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்

எத்தனையுண்டு புவிமீதே – அவை

யாவும் படைத்த தமிழ்நாடு




 எல்லையற்ற புகழ்


 நீல நிறமுடைய கடல் அலைகள் வந்து தவழும் கரையை உடையது கன்னியாகுமரி. இங்கு தெய்வத் தன்மை வாய்ந்த கன்னி ஆகிய பகவதி நின்று தவம் செய்கிறாள். இத்தகு சிறப்புடைய கன்னியாகுமரியை தெற்கு எல்லையாகவும் திருமால் கோயில் கொண்டுள்ள வேங்கட மலையை வடக்கு எல்லையாகவும் கொண்ட பெரிய நிலப் பரப்பை உடையது தமிழ்நாடு 


நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட

மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு



கல்வி வளம்



தொடக்கக் காலம் முதலே, தமிழ்நாட்டில் புலமை மிக்க பலர் இருந்தனர். திருவள்ளுவர் முதல் கம்பர் வரையிலும் கல்வியில் சிறந்த பல புலவர்கள் இருந்தனர். சங்க காலத்தில் ஒளவையார், காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற் புலவர்கள் பலர் இருந்தனர். இதனால் தமிழ்நாடு பெருமை பெற்றிருந்தது. எனவே பாரதியார்,


கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு


என்று வியந்து பாராட்டுகிறார்.


 வீரம் செறிந்த தமிழ்நாடு 


 இலங்கை புட்பகம் சாவக முதலான தீவுகள் பலவற்றையும் பழங்காலத்திலேயே போரிட்டு வென்றவர்கள் தமிழர்கள்.

அத்தீவுகளில் எல்லாம் சோழ அரசர்கள் தம் புலிக் கொடியையும் பாண்டிய அரசர்கள் தம் மீன் கொடியையும் நாட்டு அரசாட்சி புரிந்தனர். இத்தகைய வீரம் பொருந்திய சோழர், பாண்டியர் ஆகிய மாமன்னர்களின் தாய் நாடாகத் திகழ்ந்தது தமிழ்நாடு.




சிங்களம் புட்பகம் சாவக – மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு



 



உலகப்புகழ்



தமிழ்நாட்டின் பெருமை உலகளாவிய நிலையில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் வள்ளுவர். உலகிலுள்ள பெரும்பாலான அறநூல்கள் எல்லாம் சமயச் சார்புடையன. ஆனால் வள்ளுவரால் இயற்றப் பெற்ற திருக்குறள், எந்த ஒரு சார்பும் இல்லாது எல்லோருக்கும், பொருந்துகின்ற ஒன்று. எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற ஒன்று. எனவே இதை 'உலகப் பொதுமறை' என்று அழைப்பர். உலகிலுள்ள பல மொழிகளில் இதனை மொழிபெயர்த்தனர். எனவே, திருக்குறள் எனும் உலகப் பொதுமறையை இயற்றியமையால், திருவள்ளுவர் உலகப் புகழ் பெற்றார். அதனால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது. இந்த உண்மையைப் பாரதியார்,



 வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி

யாரம் படைத்த தமிழ்நாடு



என்று வியந்து பாராட்டுகிறார். இவ்வாறு, புலமை மிகுந்த ஒளவையாராலும், இளங்கோவடிகளாலும் தமிழ்நாடு பெருமை பெற்றது என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளார். சேக்ஸ்பியரால் இங்கிலாந்து நாடு புகழ்பெற்றது என்பர். ஹோமரால் கிரேக்க நாடு புகழ் பெற்றது என்பர். அதைப்போல வள்ளுவரால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது என்கிறார் பாரதியார்.



 புகழ் மன்னர்கள் வாழ்ந்த நாடு


 விண்ணை முட்டும் அளவும் உயர்ந்து விளங்கும் பெருமை உடையது இமயமலை. இமயமலைச் சிகரங்களையும் இடித்து தூளாக்கும் ஆற்றலுடையவர் தமிழ் மன்னர்கள். அவர்கள் கலிங்கம் முதலான அண்டை நாடுகள் மீது போர்தொடுத்து வென்று அங்கெல்லாம் நல்லாட்சி புரிந்தனர். சிறப்புடைய வீர மன்னர்கள் பலரும் வாழ்ந்திருந்த புகழுடைய தமிழ்நாடு 


விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு





வணிகவளம்


பண்டைய தமிழ் மக்கள் உலகிலுள்ள பல நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். குறிப்பாக, மேற்கே, உரோம், எகிப்து முதலிய நாடுகளுடனும், கிழக்கே சீனம், மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பொருட்களை தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். அத்தகைய ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்ததாகவும் அதற்கான சுங்க வரிகள் வசூலிக்கப்படுவதாகவும் பட்டினப்பாலை என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் தாம் தொடர்பு கொண்ட நாடுகளில் தம் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துச் சென்றனர். இதனால் வாணிபத் தொடர்பு கொண்ட நாடுகளிலெல்லாம் தமிழர்களின் புகழ் பரவியிருந்தது.


தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்து தமிழ்நாட்டை வளப்படுத்தியதோடு தமிழர்களின் பெருமை உலகமெலாம் செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர். இதனைப் பாரதியார்,

 


சீன மிசிரம் யவனரகம் – இன்று

தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக

நன்றாக வளர்த்த தமிழ்நாடு 



என்று குறிப்பிடுகிறார்.


வாணிபவளம் சேர்த்ததோடு, அறிவு வளர்ச்சியும், கலைவளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கு அளித்தனர். தமிழர்களின் புகழ், அவர்கள் வணிகத்தின் பொருட்டுச் சென்ற இடங்களெல்லாம் பரவியது என்கிறார் பாரதியார்.


.


தமிழர்கள் தமது அறிவுத்திறன் , வணிக திறன், கலை, கல்வி, மற்ற அனைத்தையும் சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் கற்பித்து தமிழின் பெருமையை உலகம் போற்ற பழங்காலத்திலேயே உயர்த்தியுள்ளனர். இவை அனைத்தையும் பாரதியார் செந்தமிழ் நாடெனும் என்ற பாடல் மூலம் அழகாக வடிவமைத்துள்ளார்.



Comments

Popular posts from this blog

நாலடியார் சுற்றம் தழால்

நாச்சியார் திருமொழி

பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்