திணை, பால், எண், இடம் பற்றி அறிதல்

 திணை, பால், எண், இடம்

பற்றி அறிதல்

திணை

திணை - ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள்.

* திணை இரண்டு வகைப்படும் . அவை உயர்திணை, அஃறிணை

உயர்திணை:

       உயர்ந்த ஒழுக்கமுடைய ஆறறிவுடைய மக்களைக் குறிப்பது உயர்திணை எனப்படும். தேவர், மக்கள், நரகர் உயர்திணையில் அடங்குவர். இவர்கள் மற்ற உயிர்களை விட நன்மை தீமைகளைப் பிரித்தறியும் ஆற்றல் நிறைந்தவர்கள்.


உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே"
                                   தொல் (சொல் - 1)

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை,
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை"

                                          - நன்னூல் (261)

அஃறிணை :

         அல் + திணை = அஃறிணை. உயர்வு அல்லாத ஒழுக்கம் உடையவை என்று பொருள். தேவர், நரகர், மக்கள் அல்லாத மற்றைய உயிருள்ளவை, உயிரில்லாத பொருள்கள் அனைத்தும் அஃறிணை
எனப்படும்.

சான்று:

 ஆடு, குதிரை, வீடு, மரம்,, தாமரை மலர் , கரும்பலகை, நாற்காலி.


பால் :

பால் என்பதற்குப் பகுப்பு அல்லது பிரிவு என்பது பொருள்.


 பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும்.

இஃது ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்ஆகியனவாகும்.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள் : மூன்று

* ஆண்பால் - உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது.
சான்று :  ராமன், சரவணன், முருகன்.தலைவன்.

* பெண்பால் - உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறிப்பது.
சான்று :  வள்ளி, சீதா, குமாரி, தலைவி, தோழி.

- பலர்பால் - உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது.
சான்று:  மக்கள், தலைவர், இளைஞர் கள், 

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் : இரண்டு

ஒன்றன்பால் - அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது.
சான்று: கல், மரம் யானை, புறா, மலை

 பலவின் பால் - அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது.
சான்று: அவை, வீடுகள், பசுக்கள், மலைகள், மாடுகள்.



எண்:

      பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண் எனப்படும். எண் இரண்டு வகைப்படும்.

அவை 1. ஒருமை     2. பன்மை

(i) ஒருமை :

        ஏதேனும் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை எனப்படும்.

ஒருமைக்குரிய பால்கள் - மூன்று.
* ஆண்பால் -  குமரன் ,  கலைவாணன் அவன்.

* பெண்பால் -  அவள் , தலைவி,  வாணி 

* ஒன்றன்பால் - மாடு, கோழி, மலை 



(ii) பன்மை:

    பொருட்களில் பலவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும்.

பன்மைக்குரிய பால்கள் - இரண்டு.

* பலர்பால் - ஆண்கள், பெண்கள், அவர்கள்.

* பலவின்பால் - மாடுகள், பறவைகள், அவை



இடம் :

நாம் உரையாடும் போது பேசுகின்ற நாமும், கேட்கின்றவர்களும், பேசப்படும் பொருளும் என்று மூன்று நிலைகள் உள்ளன. இதையே இடம் என்று குறிப்பிடுவர்.

இஃது மூன்று வகைப்படும். அவை,

* தன்மை
* முன்னிலை
* படர்க்கை

1. தன்மை - பேசுபவர் தன்னைக் குறிப்பது.

2. முன்னிலை - முன்னால் இருப்பவரைக் குறிப்பது.

3. படர்க்கை - தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது.





Comments

Popular posts from this blog

நாலடியார் சுற்றம் தழால்

நாச்சியார் திருமொழி

பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்