அசோகமித்திரன்
அசோகமித்திரன்
3.குருவிக்கூடு
( அசோகமித்திரன் )
"பாலு, மாடிக்குப் போய் ஹார்மோனியப் பெட்டியை எடுத்துக் கொண்டு வா" என்று அம்மா சொன்னாள். அன்று சரஸ்வதி பூஜை. அந்த வீட்டில் ஹார் மோனியப் பெட்டி மீது புத்தகங்களை அடுக்கி வைத்துத்தான் பூசை செய்வது. பாலு மாடிக்குச் சென்றான்.
மாடியில் ஹார்மோனியம் ஒரு கள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்டு, அக் கள்ளிப் பெட்டி ஒரு பெரிய பிரம்புத் தொட்டிலுள் வைக்கப்பட்டு, அத்தொட்டில் பரண்மீது ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. பாலு நாற்காலி மீது ஒரு ஸ்டூலைப் போட்டுக்கொண்டு ஏறி பரணை எட்டிப் பார்த்தான். கரப்பான், பாச்சை, எலிப் புழுக்கை எல்லா நாற்றமும் வீசியது. கைபட்ட இடத்திலெல்லாம் எத்தனையோ நாட்களாகப் படிந்திருந்த தூசி கலைந்து மேல் கிளம்பி மூச்சையடைத்தது. தொட்டிலை ஒரு முறை அசைத்த பாலு சட்டென்று தன் கையைப் பின்னிழுத்துக் கொண்டான். தொட்டிலுள் வைக்கப்பட்டிருந்த ஹார்மோனியப் பெட்டிக்கும் தொட்டிலின் ஒரு பக்க விளிம்புக்கும் உள்ள இடைவெளியில் ஒரு குருவிக் கூடு இருந்தது. எதையும் தொடாமல் பாலு எம்பி எட்டிப் பார்த்தான். அக் குருவிக் கூட்டினுள் இரண்டு முட்டைகள் இருந்தன.
""ஏன் புத்தகங்களை எல்லாம் வெறும் பலகை மீது அடுக்கி வைக்கிறாய், ஹார்மோனியம் எங்கே?" என்று அம்மா கேட்டாள்.
"பிரம்புத் தொட்டிலில் குருவி கூடு கட்டியிருக்கிறது."
"தொட்டிலில் கூடு கட்டியிருந்தால் ஹார்மோனியத்திற்கென்ன?"
"தொட்டிலில்தான் ஹார்மோனியத்தை வைத்திருக்கிறது. குருவிக் கூட்டைக் கலைக்காமல் ஹார் மோனியத்தை எடுக்க முடியாது"."
"ஹார்மோனியம் இல்லாமல் சரசுவதி பூஜை எப்படிச் செய்கிறது? நம் வீட்டில் ஒரு வருஷம்கூட அப்படி நடந்ததே கிடையாதே?
"வேண்டாம்மா... புத்தகங்களை மட்டும் வைத்துச் செய்து விடலாம்." "நகை, வஸ்திரம்கூட சாத்த முடியாதே?"
"புத்கங்களையே அடுக்கி வைத்து நகை போட்டு அலங்காரம் செய்து விடலாம்மா."
என்னமோ, இந்த வீட்டில் எத்தனையோ வருடமாக ஹார்மோனியம் இல்லாதபடி சரசுவதி பூசை நடத்தியதே கிடையாது. இந்தத் தடவை இப்படி விட்டுப் போகிறது.
பாலு நோட்டுப் புத்தகங்களையும் புத்தகங்களையும் அடுக்கி வைத்தான். பூசைக்காகப் புத்தகங்களை அவன் எந்த வருடமும் அவ்வளவு அழகாகவும் சிரத்தையுடனும் அடுக்கிவைத்தது கிடையாது. வஸ்திரம் சாத்தின பிறகு நகை வைத்து ஜோடனை செய்யும்போது இரு பக்கங்களிலும் சமமாக இடம்விட்டு சங்கிலியின் முகப்பு நன்றாக மத்தியில் தொங்குகிற மாதிரி வைத்தான். ஒரே முழம் கதம்பம்தான் பூசைக்கென்று வைத்திருந்தார்கள். அதையும் சீராக வைத்தான். அன்று புரோகிதர் வரவில்லை. வீட்டுக்குப் பெரிய பையனான அவனே அஷ்டோத்திர நாமாவளியை ஒவ்வொரு வரியாக எழுத்துக் கூட்டிப் படித்தான். ஒவ்வொரு நாமாவளிக்கும் புஷ்பத்தைக் காம்பகற்றிப் புத்தகங்கள் மீதும் அவைகளைச் சுற்றியும் மெதுவாக வைத்தான். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காயைத் தவிர பாயசம் வடையும் நிவேதனத்திற்கு வைத்திருந்தார்கள். பாலு கண்களை மூடிக்கொண்டு சரஸ்வதியை நிவேதனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். கடைசியில் கற்பூர ஹாரத்தி காட்டும்போது அவன் உடலில் மயிர்க் கூச்சம் ஏற்பட்டது. ஹார்மோனியம் வைத்துப் பூஜை செய்த எந்த சரஸ்வதி பூஜையன்றும் அவனுக்கு அந்த அனுபவம் கிடையாது.
ஒரு வாரம் பொறுத்து மாடியில் சத்தம் அதிகமாகவே இருந்தது. பாலு பரணியில் எட்டிப் பார்த்தான். கூட்டில் இரு குருவிக் குஞ்சுகள் இருந்தன. அவைகளுக்கு இரையளித்துக் கொண்டிருந்த தாய்க் குருவி சற்று தூரம் பறந்து சென்று ஒரு ஜன்னல் கதவுமீது உட்கார்ந்து கொண்டது.
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு பழைய புஸ்தகத்தைத் தேடி எடுக்க வேண்டி இருந்தது. பாலு இம்முறையும் பரண் மீது இருந்த அந்தப் பிரம்புத் தொட்டிலுள் எட்டிப் பார்த்தான். கூட்டினுள் உட்கார்ந்திருந்த பெரிய குருவி விர்ரென்று வெளியே பறந்து போயிற்று. உள்ளே இம்முறை இரண்டு முட்டைகள் இருந்தன.
அன்று பின்கட்டிலிருக்கும் அம்மாள் சாவிக் கொத்தை அவன் வீட்டில்தான் கொடுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். அவளுடைய மூத்த மகள் பிரசவித்திருந்தாள். 'ஆண் குழந்தை, ஒன்பது பவுண்டு, ஆறு தையல்கள்' என்றார்கள்.இரண்டு நாட்கள் மழை. பிறகு தொடர்ந்தாற் போல் நன்றாகக் காய்ந்தது. மாலை ஆபீஸிலிருந்து பாலு திரும்பியவன் தூக்கிவாரிப் போட்டு நின்றான். ஹார்மோனியப் பெட்டி கீழே ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. "ஐயோ, அம்மா! இதை எப்போது இறக்கி வைத்தது?" என்று அலறினான். பதிலுக்குக் காத்திராமல் மாடிக்கு ஓடினான். பரண்மீது தொட்டில் வைத்திருந்த இடம் காலியாக இருந்தது. பாலு கீழே இறங்கி அம்மா, குருவிக்கூடு இருந்ததே, பார்க்கவில்லையா? அந்தத் தொட்டில் எங்கே அம்மா?" என்று கத்தினான்.
அந்தத் தொட்டிலைத்தான் பின் கட்டில் பிறந்த குழந்தையைத் தொட்டிலிட அவன் அம்மா கொடுத்திருந்தாள். யாரோ ஒரு கூலியாள்தான் பரண்மீது ஏறித் தொட்டிலைக் கீழே இறக்கி வைத்தானாம். ஒரே வைக்கோலும் சிறுசிறு இறகுகளுமாக இருந்த குருவிக்கூட்டை வெளியே தூக்கிப் போட்டாயிற்று;
அந்த இரண்டு முட்டைகளும் கீழே விழுந்து உடைந்து போய் விட்டன. தரையில் அந்த இடத்தில் ஏதோ வெல்லப்பாகு சிந்தின மாதிரி இருந்தது.
பாலுவால் அன்றிரவு சாப்பிட முடியவில்லை. அன்று மட்டும் இல்லை.
அடுத்த நாளும் முடியவில்லை. அதற்கடுத்த நாளும் முடியவில்லை. அவன்
வீட்டிலிருந்தவர்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது.
பாலு மாடியில் இருந்தான். அவன் மாடிக்கு வரும் போதெல்லாம் அந்தத் தாய்க் குருவி பறந்துபோய் சன்னல் கதவுமீது உட்கார்ந்து கொள்ளும். அன்று அதைக் காணோம்.
பாலு அந்த ஜன்னல் கதவைப் பார்த்த மாதிரியே உட்கார்ந்திருந்தான். திடீரென்று எங்கிருந்தோ வந்து அந்தக் குருவி சன்னல் கதவு மீது உட்கார்ந்து கொண்டது.
"வந்துவிட்டாயா? வந்துவிட்டாயா? நீதானா? நீதானா?" என்று பாலு பதறினான். ''ஆமாம், நான்தான். நானேதான்", என்றது குருவி.
"உன் மக்கள் பிறக்காமலேயே இறந்துவிட்டார்களே!"
"ஓகோ, என் மக்கள் பிறக்காமலேயே இறந்துவிட்டதற்காக நீ அழுகிறாயா?" என்று குருவி கேட்டது.
"ஐயோ, இப்படியாகிவிட்டதே. நான் என்ன பண்ணுவேன்?"
"நீ என்ன பண்ண முடியும்?"
பாலுவின் அழுகை சடாரென்று நின்றது. "என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்?"
"உன்னால் என்ன பண்ண முடியும்?''
"உன்னையும் உன் குழந்தையையும் எவ்வளவு மாதங்கள் ஜாக்கிரதையாகக் காப்பாற்றினேன். செய்யவில்லையே?" பூஜையன்றுகூட நான் உன்னைத் தொந்தரவு
"நீ என்னைப் பார்ப்பதற்கு முன்னாலேயே இரண்டு தடவை குஞ்சு பொரித்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக இருந்தால் இன்னும் அடுத்து இரண்டு தடவை குஞ்சு பொரிப்பேன்".
"உன் மக்கள் பிறக்காமலேயே இறந்துவிட்டார்களே, முட்டையைக் கீழே
தள்ளி உடைத்துவிட்டார்களே!"
"சரி. ரொம்ப வருத்தமான விஷயம்தான். ஆனால் ஒரு பூனை பரண் மீது வந்திருந்தால்..."
"நான் அதை விரட்டியிருப்பேன்."
"அடடா! அவ்வளவு அக்கறை உள்ளவன் நாள் முழுவதும் அல்லவா என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்? உனக்குச் சௌகரியம் நேரும்போதும் மனதுக்கு எப்போதோ தோன்றும்போதும் மட்டும் தானே இங்கே நீ என்னை வந்து பார்க்கிறாய்? காக்கிறாய்?"
பாலுவுக்குக் குருவி ரொம்பவும் நன்றி கெட்டு இருப்பதாகத் தோன்றிற்று.
"ஆமாமப்பா, பிறக்காத என் குஞ்சுகளுக்காக ரொம்ப அழுகிறாயே, இப்போது அந்தத் தொட்டிலை ஒரு மனுஷக் குஞ்சுக்காகத்தானே இங்கிருந்து எடுத்துப் போயிருக்கிறார்கள்?"
"பாலு கீழே இறங்கிப் போய்விடலாமா" என்று நினைத்தான்.
"அடேயப்பா உன் தயவை நம்பித்தான் நான் வாழ்ந்த மாதிரியும் அது தவறியதனால் எல்லாத் துக்கமும் உனக்கே வந்த மாதிரியும் மாய்ந்து போகிறாயே?"
"நீ... நீ ரொம்ப..."
"அது சரி, என் குஞ்சுகளுக்காக இவ்வளவு பரிகிறாயே, ஏன் மூட்டைப்பூச்சிக் குஞ்சுகளைக் காலால் நசுக்குகிறாய்? அவைகளும்
பாலு மாடிப்படியருகே விரைந்தான். குருவி பறந்து போய்விட்டது.
அப்புறம் எவ்வளவோ தடவைகள் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. ஆனால் பாலுவுடன் அது மறுபடியும் பேசவில்லை.
Comments
Post a Comment