தேவதை

 தேவதை


4. தேவதை


(உத்தமச் சோழன் )


ஒரு பந்தயக் குதிரையின் மினுமினுப்போடும் வேகத்தோடும் தன்னை வழி மறித்தவர்களையெல்லாம் சர்வ அலட்சியமாய்ப் புறந்தள்ளி ஓடிக்கொண்டிருந்த அந்தப் புத்தம் புது பேருந்து தூரத்தே பார்க்கும்போது ஒரு ரோஜாப்பூ போலவும். அருகில் நெருங்கியதும் ஒரு தேவதையைப் போலவும் சாலை ஓரத்தில் தனியாய் நின்றிருந்த அவளின் விரலசைவுக்குக் கட்டுப்பட்டு சட்டென்று நின்றது.


அந்த அவசர நிறுத்தத்தினால் பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ள, உட்கார்ந்திருந்தவர்களோ தங்கள் எதிர் சீட்டுகளில் முட்டிக்கொள்ள, அதனால் எழுந்த வேதனை கோபமாய் உருமாறி, என்ன 'டிரைவரய்யா இவர்' என்று அனைவரும் ஒட்டுமொத்த இரைச்சலுடன் ஒட்டுநரைப் பார்க்க, அவருக்கு அருகில் இருந்த படிக்கட்டு வழியே ரொம்பவும் நிதானமாய் அந்த அழகு தேவதை ஏறிக்கொண்டிருந்தது.


ஏறி வந்த அழகின் வீச்சில் ஆண்களின் கோபமெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக, பெண்களின் கோபமோ கையாலாகாத பொறுமையாய் மறுபிறப்பெடுத்தது. பேருந்துக்குள் ஏற்கனவே நெருக்கமாய் நின்றிருந்தவர்கள் தங்களை


மேலும் நெருங்கிக் கொண்டு அவளுக்குத் தாராளமாய்ப் பாதை போட்டுத்


தர, ஒரு மகாராணியைப் போல் பின்புறம் நோக்கி அவள் முன்னேறினாள்.


*மணி! அவங்கள இடம் பார்த்து ஒக்காத்தி வை!" என்ற வழக்கத்துக்கு மாறான, ஒட்டுநரின் அதிகாரக் கட்டளையால் நடத்துநருக்கு எக்கச்சக்க எரிச்சல். பிறகென்ன? அவளைப் போன்றதொரு அழகியை நடத்துநர்தானாகட்டும். நிற்க விட்டுவிடுவாரா என்ன!' ஓட்டுநருக்குள் திடீரென்று பொங்கத் தொடங்கிய உற்சாகக்


குற்றாலத்தால், அவர் பேருந்தை 'ஜெட்'டாக ஒட்டிக் கொண்டிருந்தார்.


நடத்துநருக்கோ இப்போது ஒரு தலைபோகிற பிரச்சனை, அந்த தேவதையை ஏதாவது ஒரு இடத்தில் வசதியாக உட்கார வைத்துவிட வேண்டும்.

நிற்கவே இடமில்லாதபோது உட்கார எங்கே போவது? ஆனாலும் என்ன? எப்படியோ அவளை உட்கார வைத்துவிட வேண்டும். இல்லாது போனால் அவரென்ன நடத்துர் அவரது கண்கள் ஒவ்வொரு சீட்டாய் ஆராய ஆரம்பித்தன. முதல்


இரண்டு மூன்று சீட்டுகளில் அலுவலகம் செல்வோர் பேருந்தின்


வாடிக்கையாளர்கள். அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது.


அடுத்த ஒரு சீட்டில் இரண்டரை நாடியில் ஒரு அம்மாவும். அரை நாடியில் ஒரு அய்யாவும். சட்டென்று நடத்துநருக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்று. இந்த அரை நாடியைக் கிளப்பினால் அந்த தேவதைக்கு இடம் கிடைத்துவிடும். யதேச்சையாய்த் திரும்பிய அந்த இரண்டரை நாடியின் முக உக்கிரத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே நடத்துநரின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது.


அதற்கும் பின்னால் வரிசையாய் நான்கைந்து சீட்டுகளில் அட்டகாசச் சிரிப்புகளும் அரட்டைகளுமாய் இன்னாள் கல்லூரி இளவரசர்கள் வருங்கால வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத் தீவிர உறுப்பினர்கள். அவர்களிடம் நடத்துநருக்கு எப்போதுமே அளவு கடந்த மரியாதை, ஒரு நாலடி தள்ளியே நிற்பார்.


கடைசி சீட்டில் நடத்துநரின் கண் நிலைகுத்தி நின்றது. சன்னல் ஓரத்தில் ஒரு பேரிளம் பெண். இந்தக் கோடியில் ஒட்டிய கன்னங்களுடன் ஒரு அழுக்குப் புடவை, நடுவில் ஒரு அரை டிக்கெட். அரை டிக்கெட்டைப் பார்த்தாலே அது அழுக்குப் புடவையின் வாரிசுதான் என சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்தது.


ஆகா! தேவதைக்கு இடம் கிடைத்துவிட்டது!


மின்னலாய் அந்த இடத்தை அடைந்த நடத்துநர் அதே வேகத்திலேயே அந்த அழுக்குப் புடவையை வார்த்தைகளால் ஒரு உலுக்கு உலுக்கினார்.


"இந்தாம்மா! ஒத்தை ரூபா கொடுத்து டிக்கெட் வாங்கிட்டா பஸ்ஸே சொந்தமாயிடுச்சுன்னு நெனைப்போ? நீ ஒரு சீட்டுலே... ஒம்புள்ளை ஒரு சீட்டுலே... நல்லாருக்கும்மா.. புள்ளையைத் தூக்கி மடியிலே வச்சுக்கோ.. நல்லா நகர்ந்து ஒக்காந்துக்கோ... மேடம்! இங்கே வாங்க. இப்படி ஒக்காருங்க" என்றவர் மீண்டும் அந்த அழுக்குப் புடவையைப் பார்த்ததும் மலைத்துப் போனார். அவருடைய அதிகாரம் ஒரு அங்குலம்கூட அவளிடம் செல்லுபடியாகவில்லை.


"என்னம்மா! சொல்றது காதிலே விழலை?"

"எனக்குக் காதுலேயும் விழும், மூளையும் வேலை செய்யும். ஒத்தை ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்டா பஸ் எனக்கில்லேங்கிறது நல்லா தெரியும். அதே மாதிரி மாதக் கூலி வாங்குற ஒனக்கும் இந்தப் பஸ் சொந்தமில்லேங்கிறது இன்னும் நல்லாவே தெரியும்.. அது போவட்டும்.. எதுக்காவ எம்மவனைத் தூக்கி மடியிலே வச்சுக்கணும்? எனக்கு ஒரு டிக்கெட், எம்மவனுக்கு அரை டிக்கெட் வாங்கியிருக்கேன், ஒன்னோட அதிகாரத்தையெல்லாம் எவளாவது அள்ளி முடிஞ்சவ வருவா, அவகிட்டே வச்சுக்கோ... ஆமா." இன்னும் வசதியாக அமர்ந்து கொண்டது அழுக்குப் புடவை.


நடத்துநருக்கு முகம் மட்டுமல்ல, உடல் முழுவதுமே குப்பென்று வியர்த்துப் போய் விட்டது. அவருக்கு அந்த அழுக்குப் புடவை ஒரு சவால் ஆகிப் போயிருந்தாள்.


"ஓம் புள்ளைக்கு அரை டிக்கெட்தானே வாங்கியிருக்கே! ரெண்டு பேரும் ரெண்டு சீட்லே ஒக்காந்திருக்கீங்க!" ஆனா


"கண்ணு தெரியுதில்லே, எம்புள்ளை அரை சீட்டுலேதான் ஒக்காந்திருக்கான். அரை சீட் பாக்கியிருக்கு. நல்லா பாத்துக்க.. யாரை வேணும்னாலும் அதுலே ஒக்காத்திவை."


நடத்துநருக்கு மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேருந்து மொத்தமும் அவரையும் அழுக்குப் புடவையையும் கவனித்துக் கொண்டிருந்தது.


அந்த அசாதாரண மௌனத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் அனிச்சையாய்


பஸ்சை நிறுத்திவிட்டு, "மணி! என்ன.. அது?" என்றார்."


"நீங்கதானே சொன்னிங்க. இவங்களை உக்காத்திவையுன்னு... அதான்.. இங்க ஒரு பொம்புளைப் பிசாசுகிட்டே மாட்டிக்கிட்டு அல்லாடுறேன்."


நடத்துநரின் ஆற்றாமை முழுவதும் வெளிப்படுவதற்கு முன்பே அழுக்குப் புடவை வெடித்தது.


"இதோ பாருய்யா.. பேசறத மரியாதையாப் பேசு.. மீறினே பதிலும் அப்படித்தான் கிடைக்கும்... ஞாபகம் வச்சுக்கோ."


ஓட்டுநர் கொஞ்சம் ராஜதந்திரம் தெரிந்தவர். நடத்துநரை ஷெட்டில்


தேற்றிக் கொள்ளலாம் என்று சட்டென்று பேருந்தை எடுத்துவிட்டார்.


மாதா கோவில், தென்னத்தோப்பு, பள்ளிக் கூடம், நெல் வயல்கள், கடைத் தெரு, வீடுகள், திரையரங்கு இவற்றுக்கெல்லாம் 'டாட்டா' காட்டிக் கொண்டு பேருந்து ஓடிக்கொண்டேயிருந்தது.கொஞ்ச தூரம் வரை பயணிகள் அனைவரும் அழுக்குப் புடவையையே திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அவள் ஒரு கோபம் கொண்ட காளி போலவே தோன்றினாள்.


தேவதையோ தன்னை முன்னிலைப்படுத்தி இது என்ன தேவையற்ற சச்சரவு என்று சங்கடப்பட்டாலும், மற்றவர் கோணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் அந்த அழுக்குப் புடவையைப் பார்த்தது.


பேருந்து போகப் போக பயணிகளின் கவனம் வெளியில் வேடிக்கை பார்ப்பதிலும் தாங்கள் பார்த்த திரைப்படங்களின் சாதக பாதக விவாதத்திலும், கூரையிலிருந்து வழிந்த 'பொடி நடையாய் போறவரே'யிலும், கொஞ்சம் போல, நட்டிருக்கும் குருவை கைக்கு வருமா, நடப்போகும் சம்பா கைகொடுக்குமா என்ற கவலையிலும் மூழ்கி, அழுக்குப் புடவையின் ஆவேசம், நடத்துநரின் மூச்சுத் திணறல், தேவதையின் அங்கலாவண்யங்கள் எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து போயினர்.


'அந்த அம்மாளுக்கு உட்கார இடம் கொடுத்திருக்கலாமோ! அர்த்தமில்லாமல் சண்டை போட்டு விட்டோமோ' என்றதொரு உணர்வு லேசாய் மனத்தை உறுத்த, இரண்டொரு தரம், நின்றிருந்த தேவதையை, உட்கார்ந்திருந்த அழுக்குப் புடவை அண்ணாந்து அண்ணாந்து பார்த்தது. இவள் பார்த்தபோது தேவதை பார்க்கவில்லை. தேவதை பார்த்தபோது இவள் பார்க்கவில்லை.


யதேச்சையாய் இருவரின் பார்வைகளும் சந்தித்துக் கொண்டபோது அழுக்குப் புடவையின் பார்வையில் மென்மையாய் ஒரு சிநேகிதச் சிரிப்பு. அதனை இனம் கண்டு கொண்ட தேவதையின் உதடுகளில் ஒரு பூவின் மலர்ச்சி.


அழுக்குப் புடவைக்கு என்ன தோன்றியதோ, மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டது. நன்றாய் நகர்ந்து உட்கார்ந்து கொண்டது. தேவதையைப் பார்த்து, "இங்கே வாங்கம்மா.. இப்படி வந்து உட்காருங்கம்மா" என்றது.


அந்த அழைப்பு ஒரு மந்திரச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். மறுப்பேதும் இன்றி அந்தத் தேவதையும் அழுக்குப் புடவையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டது.


பேருந்தோ ஆச்சரியத்தில் குளியலாடிக் கொண்டிருந்தது.


மேலே கோவந்தானேம்மா" அழுக்குப் புடவையின் தயக்கமான "சந்தேகத்திற்கு, "நோ.. நோ.. கண்டிப்பா இல்லே... ஒங்களை நினைச்சாலே பெருமையா இருக்கு. இளைச்சவங்கள்னாலே எல்லாருக்குமே ஒரு அலட்சியந்தான். புழு பூச்சி மாதிரிதான். கோபமான்னு கேட்டீங்களே... நடத்துநரோட மொட்டலுக்குப் பணிஞ்சு போயிருந்தாத்தான் எனக்குக் கோபம் வந்திருக்கும். ஆனா 'நானும் ஒரு மனுஷிதான்னு நிரூபிச்சிட்டீங்களே! சந்தோஷமா இருக்கு" என்று தேவதை விளக்கம் தந்தது.


தேவதையின் பேச்சு அழுக்குப் புடவைக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. குழப்பமான மௌனத்துக்குப் பிறகு, "நீங்க சொன்னது எனக்குச் சரியா புரியலேம்மா, ஆனா அந்த கண்டக்டர் எங்கிட்ட கொஞ்சம் சாதாரணமா சொல்லியிருந்தாருண்ணா, நானும் மறுபேச்சு பேசாம தள்ளி இடம் கொடுத்திருப்பேன். எடுத்த எடுப்பிலேயே அவரு மெரட்ட ஆரம்பிக்கவே, எனக்கும் சுருக்குன்னு கோபம் வந்துடுச்சி, நிமிசத்திலே ராட்சசியாயிட்டேன்."


"ச்சேச்சே.. ஒங்களுக்கு வந்த கோபம்தான் நீங்க ஒரு மனுஷிதாங்கறதுக்கு அடையாளமே. ஒங்ககிட்ட கண்டக்டர் நடந்துகிட்ட முறைக்கு நீங்க பதில் சொன்ன விதம்தான் சரியானது. உங்களுக்கும் உங்க மகனுக்கும் டிக்கெட் வாங்கியிருக்கீங்க. பிறகெதுக்கு மகனைத் தூக்கி மடியிலே ஒக்கார வைச்சுக்கணும். அது போகட்டும். அதையே அவரு சொல்ற விதமா சொல்லியிருந்தா நீங்களும் கேட்டிருப்பீங்க. 'உரிமைங்கறதும் தன்மானங்கறதும் ஒவ்வொருத்தருக்கும் உயிர் மூச்சு மாதிரி'. அதுவே பறிபோகிற மாதிரி இருந்தா அதைக் காப்பாத்திக்க ராட்சசியா என்ன... எதுவா வேண்டுமானாலும் மாறலாம்... அதுலே எந்தத் தப்புமில்லே."


அந்த உண்மையான இரண்டு பெண்களைச் சுமந்து கொண்டிருந்த கர்வத்தாலோ என்னவோ அந்தப் பேருந்து கம்பீரமாய் இப்போது ஓடிக் கொண்டிருந்தது.



Comments

Popular posts from this blog

நாலடியார் சுற்றம் தழால்

நாச்சியார் திருமொழி

பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர்