சிவவாக்கியம் - சிவவக்கியார்
சரியை விளக்கம் :
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே. 4
அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய்விட்டது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியைப் பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.
அறிவு நிலை
மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம்
வைத்ததே. 34
செம்பு, பித்தளை, வெண்கலம் போன்றவற்றின் கலப்பினால் மாறுபட்டு செய்த ஓசை மணியை ஒலித்து, வண்டின் எச்சிலாகிய தேனைக் கொண்டு உளியால் பற்பல வகைகளில் உடைத்துச் செதுக்கப்பட்ட கற்சிலையின் மீது ஊற்றி அபிஷேகம் செய்து அதன் உட்பொருளை அறியாத மூடர்களே! மெய்ப்பொருளாகிய ஈசன் நம்மிடமே மாறுபட்ட அண்டக்கல்லாக இருப்பதை அறிந்து அதிலேயே அபிஷேகம் செய்து அதனையே தியானிக்கவும், செய்த பாவங்கள் யாவையும் கூறுபட்டு மெய்குருவின் திருவடிகளை சிந்தையில் வைத்து தவம் செய்யுங்கள்.
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லையே. 35
கோயில் என்பது என்ன? குளங்கள் ஆவது எது? என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும், குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே! நமது உடம்பினுள் கோயிலாகவும், குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும் நித்தியமாக உள்ளது என்றும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்றும் உணர்ந்து கொள்ளுங்கள்.
கிரியை
சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. 47
ஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் ஏதப்பா? இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்!
அறிவுநிலை
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புக
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லையே. 48
பசுவின் மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் பசுவின்முளைக் காம்புகளில் சேராது, மோரிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகாது. உடைந்து போன சங்கிலிருந்து ஓசை வராது, அதிலிருந்து வெளிவரும் உயிர் மீண்டும் அவ்வுடலாகிய சங்கில் புகாது. விரிந்த பூ மொட்டகாது. மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் ஓட்ட முடியாது. அது போல்தான் நம் உடம்பை விட்டு உயிர்போய் விட்டால் மீண்டும் அவ்வுடம்பில் சேர்ந்து பிழைக்க வைக்க முடியாது. ஆகவே உடம்பில் உயிர் உலாவிக் கொண்டிருக்கும்போதே யோக தியானம் செய்து இறைவனை அடைந்து பிறவா நிலை அடையுங்கள்.
Comments
Post a Comment