அகநானூறு 34
புலத்தி துவைத்த ஆடை போல் தூய நிறம் கொண்ட அன்னம்
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் 5
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
ஆ
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
செல்க, தேரே நல் வலம் பெறுந! 10
இ
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
''இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து'' என, 15
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
கிளியைத் தூது விடுவாள். இன்று திரும்புமாறு சொல் என்பாள். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். வலவ, விரைந்து தேரை ஓட்டுக என்கிறான், பொருளீட்டித் திரும்பும் தலைவன். – இது களவொழுக்கக் காலம்.
அ
முல்லை நிலம்.
அதில் பிடவம் பூ பூக்கும்.
புதரில் பூக்கும்.
தலையில் சூடும் கண்ணி-மாலை போல் பூக்கும்.
கருநிறப் கோல்களில் பூக்கும்.
கானவன் முள் சுமையைக் கவைக்கோலில் மாட்டித் தூக்கிச் செல்வான், அவன் கவைக்கோல் போலப் கொம்புகள் கொண்டது இரலைமான்.
அதன் பெண்மான் பிணை.
அங்கே ஆட்டுக்குட்டிகள்.
இவை எல்லாம் செறிவாக வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை [பதவு] மேயும்.
அங்கே ஓடும் தெளிந்த ஊற்று நீரைப் பருகும்.
அருகில் உள்ள மணல்-கரையில் படுத்துக்கொண்டு மேய்த்தை அசை போட்டுக்கொண்டிருக்கும்.
ஆ
இல்லத்தில் என்னைப் பெருந்தகை எனப் போற்றிக்கொண்டு நான் அருகில் இல்லாத்தால் மனமுடைந்து என் காதலி காத்துக்கொண்டிருப்பாள்.
பாக!
தேரை உன் திறமையையெல்லாம் [வலம்] காட்டி ஓட்டிச்செல்க.
இ
காப்பு மிக்க வீட்டுப்பகுதியில் அன்னம் தன் துணை அன்னத்தோடு விளையாடும்.
கையிலே அழுக்கைப் போக்கும் பசையைத் தடவிக்கொண்டு புலைத்தி (வண்ணாத்தி) துணியைக் கசக்கி தண்ணீரில் தோய்ப்பது போல் அந்த அன்னங்கள் விளையாடும்.
மற்றொருபுறம் என் காதலி கிளிக்கு மாலை போட்டு அதனுடன் பேசிக்கொண்டிருப்பாள்.
“என்னை விட்டுச் சென்றவரிடம் பறந்து சென்று இன்று திரும்புக என்று சொல்” என்பாள்.
வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்று அஞ்சி, கிளியுடன் மழலைச் சொல்லால் பேசுவாள், நாணத்தோடு பேசுவாள்.
அவள் மாட்சிமை நலம் பெற விரைந்து தேரைச் செலுத்துக, என்கிறான் தலைவன்.
Comments
Post a Comment