பாதுகை
பாதுகை பாதுகை ( பிரபஞ்சன் ) இரண்டு பெருச்சாளிகள் பக்கத்தில் பக்கத்தில் நிற்பது போல அந்தச் சப்பாத்துகள் இருந்தன. புத்தம் புதிய சப்பாத்துகள். முகம் பார்த்துத் தலை சீவிக் கொள்ளலாம் போன்ற பளபளப்பு. வாசலில் காய்ந்த வெயில் வெளிச்சம் பட்டுக் கருப்பு மின்னல் மாதிரி அவைகள் ஒளிர்ந்தன. பொன்னுத்தம்பி அந்தச் சப்பாத்துக் குழந்தைகளைப் பார்த்தான். கருப்பு இரட்டைக் குழந்தைகள். வெள்ளைக்காரத் தெருவில் துரைமார்களுக்கு மட்டுமே பாதுகைகள் செய்யும் மாடன் சிரத்தையோடும் ஆர்வத்தோடும் செய்திருந்தான் அவைகளை. விலை கொஞ்சம் கூடுதல்தான். அதற்கென்ன செய்ய முடியும். துரைமார்கள் கொடுக்கிற கூலியைத்தானே தானும் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். ரொம்ப நாள் ஆசை அன்று நிறை வேறியது பொன்னுத்தம்பிக்கு. துரைமார்களைப் போலவே படித்து அவர்களோடேயே தொழிலும் செய்கிறவன். அவர்களைப் போலவும் உடுத்த வேண்டாமா என்ன? கஞ்சி முடமுடப்பில் நிமிர்ந்து, கத்தி மாதிரி நின்ற கால்சராய்களின் மடிப்பு பழுதுபடா வண்ணம் வாகாக உட்கார்ந்து கொண்டு, மேஜோடுகளை எடுத்தான். மேஜோடுகளும் புதிதுதான். பாம்பு உரித்த சட்டை மாதிரி, மெருகும் மென்மையுமாய்...